சென்னை:

சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறும் ரஜினிகாந்த் தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்தால் இஸ்லாமி யர்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறினார். இது தமிழக அரசியல் கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி,   ரஜினிகாந்த் நல்ல நடிகர், அரசியல் சூழ்நிலை பற்றி அவர் புரிந்து கொள்ள வேண்டும்  என்று கூறியவர், இந்தியா முழுக்க அனைத்து தரப்பும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறது.

திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் ஏற்கனவே கூறியபடி, ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர், ஆனால், அரசியல் சூழ்நிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக பக்கம் ரஜினிகாந்த் சாய்ந்து கொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் முழுமையாக இந்த சட்டம் பற்றி உணர்ந்து தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும். பாஜக, சங்பரிவார் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட சட்டம் சிஏஏ. இப்படி ஒரு சட்டத்திற்கு இந்த நாட்டில் இப்போது என்ன தேவை வந்தது.

இவ்வாறு பொன்முடி கேள்வி எழுப்பினார்.