சென்னை: பிரபல மென்பொருள், வன்பொருள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும்  ஹெச்சிஎல் நிறுவனம் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கிறது.

இதற்காக தமிழகஅரசுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்த  திட்டத்தின்படி, பிளஸ் 2 முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 பேருக்கு இந்த திட்டத்துக்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகிறது. இந்த பயிற்சியின்போது 7-வது மாதம் முதல் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

பணியில் சேர்ந்தவுடனே தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்ப) தரப்படும். இதுதவிர ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியையும் தொடர முடியும். அதற்கான கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கும். இந்த திட்டத்தின் தேர்வு முகாம் இன்று (அக்.30) சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிமற்றும் ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

இதையடுத்து விருப்பமுள்ள வர்கள் https://bit.ly/HCLTB-Tamilnadu என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை சென்னை – 88079 40948, மதுரை – 9788156509, திருநெல்வேலி- 98941 52160, திருச்சி – 94441 51303, கோவை, ஈரோடு, திருப்பூர் – 89032 45731, 98655 35909. ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.