சென்னை:

சூரரைப் போற்று திரைப்படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் 39-வது படத்தை இயக்குநர் சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இயக்குநர் ஹரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுதொ கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 39 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ட்வீட் செய்தது.

நடிகர் சூர்யா, நடிக்கும் நடிக்கும் 39-வது படத்தை இயக்கும் இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 39-வது படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ஹரி இயக்கத்தில் சூர்யா ‘அருவா’ என்ற டைட்டிலில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சூர்யா நடிக்கும் 39-வது படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இயக்குநர் ஹரி இயக்குகிறார். ‘அருவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சூர்யா, இயக்குநர் ஹரி இணையும் 6-வது படம். இயக்குநர் ஹரியின் 16-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் டி.இமான் சூர்யாவுடனும், ஹரியுடனும் முதல்முறையாக இணைகிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் வலிமை, ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களும் ரிலீஸாக உள்ளன. இந்நிலையில் சூர்யாவும் தீபாவளி ரேஸில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.