சென்னை:
தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் யுகாதி புத்தாண்டுத் திருநாளை சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்று ரீதியாகவே விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே வாழும் திராவிட மக்கள் தமக்குள் ஏராளமான பண்பாட்டுக் கூறுகளில் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர். ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்தவர்களாக விளங்குகின்றனர். இந்தத் தொடர்ச்சி என்றும் நீடிக்க வேண்டும். நமக்கிடையேயான உறவு வலுப்பட வேண்டும். நமது பண்பாட்டையும் மொழியையும் காக்க ஒன்றிணைந்து நிற்பது வரலாற்றுத் தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.