சென்னை

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடனான விவாகரத்து குறித்த விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி சைந்தவியை கடந்த 2013ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையொட்டி ஜி.வி பிரகாசை பலரும் விமர்சித்து வந்தனர்., இந்த விமர்சனத்திற்கு நடிகர் ஜி.வி. பிரகாஷ் அறிக்கை வெளியிட்டு பதிலளித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

”புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கபடுவது துரதிர்ஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே, ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது “யாரோ ஒரு தனிநபரின்” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.

அனைவரிடமும் கலந்தாலோசித்து, பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

என்று தெரிவித்துள்ளார்.