சென்னை: ”குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது; குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும்”  என திமு கழக தலைவர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக, உரிமை மீறல் குழு 2வது முறையாக  ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.  உரிய காரணங்களின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டில்,
“தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டுசென்று காண்பித்தோம். கமிஷன் வாங்கிக் கொண்டு அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள்.
முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயர் நீதிமன்றம். அடங்காமல் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயர் நீதிமன்றம்.
இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது! குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும்!”.