சென்னை: வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மோட்டார்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பம்புசெட் மோட்டார்கள், வெட்கிரைண்டர்கள், மருத்துவமனையின் ஐசியு வார்டு உள்பட பல பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸ், வரிஉயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “வெட் கிரைண்டர்கள், விவசாய பம்ப்செட்டுகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜூலை 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி, குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.

சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பிற பொருட்கள் மற்றும் சேவைகளை விட வெட் கிரைண்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விகிதம் 5 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும், பம்ப் செட் மீதான வரி 12 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டிருப்பது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வரி உயர்வால் தொழில் துறையும், வேளாண் துறையும் வீழ்ச்சியை சந்திக்கும்.

வெட் கிரைண்டர்கள் மீதான வரி 18% ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாகும். 2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக கிரைண்டர்கள் மீது 4% மட்டுமே மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட போது கிரைண்டர்களை ஆடம்பர பொருளாக அறிவித்து, 28% வரி விதிக்கப்பட்டது. அதற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக கிரைண்டர்கள் மீதான வரி முதலில் 12% ஆகவும், பின்னர் 2019-ஆம் ஆண்டில் 5% ஆகவும் குறைக்கப்பட்டது.

அதிக வரி விதிப்பால் பெரும் வீழ்ச்சியை சந்தித்த கிரைண்டர் உற்பத்தித் தொழில், வரி குறைப்புக்குப் பிறகு தான் படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கிரைண்டர்கள் மீதான வரி 18% ஆக உயர்த்தப்பட்டால், 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிரைண்டர்களின் விலை ரூ.600 வரை அதிகரிக்கும். 40 லிட்டர் கொள்ளளவுள்ள கிரைண்டர்களின் விலை ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உயரும். விலை உயர்வின் காரணமாக விற்பனை கடுமையாக பாதிக்கும். அத்தகைய சூழலில் கோவையில் நடைபெற்று வரும் கிரைண்டர்கள் உற்பத்தி மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.

மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளுக்கான வரி உயர்வும் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பம்ப்செட் தொழில் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பம்ப்செட் உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே உதிரிபாகங்களுக்கு 18-28% வரி, பணி ஒப்பந்தங்களுக்கு 18% வரி, விற்பனையின் போது 12% வரி என பல்வேறு நிலைகளில் 48-58% வரி செலுத்தி வருகின்றனர். இதனால், பம்ப்செட்டுகளின் விலை அதிகரித்திருப்பதுடன், அதன் உற்பத்தியாளர்களுக்கான லாபமும் குறைந்திருக்கிறது.

ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பம்ப்செட்டுகள் மீதான விலை 10% வரை உயரக்கூடும். அது அந்தத் தொழிலை கடுமையாக பாதிக்கும். பம்ப்செட்டுகளின் விலை உயர்வு தொழில்துறையை மட்டுமின்றி வேளாண்மை தொழிலையும் பாதிக்கும். வெட்கிரைண்டர், பம்ப்செட் உற்பத்தியின் தலைநகராக திகழ்வது கோயம்புத்தூர் தான். கோவையில் மட்டும் 100 பெரிய நிறுவனங்கள், 900 சிறிய நிறுவனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிரைண்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

அதேபோல், கோவையில் மட்டும் 3000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பம்ப்செட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக 4000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான பணியாளர்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பாதிப்பு அவர்களுடன் மட்டும் நின்றுவிடாது. ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்கும் தடையை ஏற்படுத்தும். இந்த ஆபத்து போக்கப்பட வேண்டும்.

மற்றொருபுறம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 7.50 விழுக்காட்டிலிருந்து 12.5% ஆக உயர்த்தப் பட்டுள்ளது. அத்துடன் 2.50% வேளாண் தீர்வை, 0.75% சமூக நல கூடுதல் வரி, 3% ஜி.எஸ்.டி வரி ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம் 18.75% வரி செலுத்த வேண்டியிருக்கும். தங்கம் என்பது பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இந்திய பண்பாடு உருவாக்கி வைத்துள்ள வழக்கங்களின்படி, ஏழைகளும் அவர்கள் வீட்டுப் பெண்களின் திருமணத்திற்காக தங்க நகைகளை போட வேண்டும்.

ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்க நகைகள் வாங்கினால், அதற்கு வரியாக ரூ.18,750, சேதாரமாக சுமார் ரூ.12,000 என மொத்தம் ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களால் இந்த அளவுக்கு கூடுதல் நிதிச்சுமையை தாங்கிக் கொள்ள முடியாது. இறக்குமதி வரியை உயர்த்துவதன் மூலம் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. கடந்த கால அனுபவங்கள் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கவில்லை.

இறக்குமதி வரியை உயர்த்துவதால் எந்தப் பயனும் ஏற்படாது; மாறாக, தங்கக் கடத்தல் தான் அதிகரிக்கும். அத்துடன் தங்கத்தின் விலை ஏழை மக்களால் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு உயரும். இது விரும்பத்தக்கதல்ல. எனவே, வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வையும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஜிஎஸ்டி வரி உயர்வு தமிழகத்தின் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது என்பதால், அதை திரும்பப் பெறும்படி மத்திய அரசை தமிழக அரசும் கேட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு! விவசாய துறையை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் அதிருப்தி…