சென்னை,

மிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2ந்தேதி ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக நாடு முழுவதும் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ந்தேதி வணிகர்கள் சார்பாக 1000 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து வெள்ளையன் கூறியதாவது,

உலக வர்த்தகமயமாக்கல் திட்டத்திற்கு ஆதரவாக உள்ள  ஒரே நாடு இந்தியா. ஒரே தேசம், ஒரே வரி என மோடி அறிவித்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் நகர வர்த்தகர்கள் நுழைந்து விட்ட நிலையில் கிராமப்புற வர்த்தகர்களையும் இணைப்பதற்காக 25,000 வைபை இணைப்புகளை இலவசமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகம், ஜி.எஸ்.டி வரி இவற்றை எதிர்த்து வருகிற அக்டோபர் 2-ந்தேதி தமிழகத்தில்1000 இடங்களில் வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.

ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டம் மோசடியான அறிவிப்பு. இந்த திட்டத்தால் நமது சுதந்திரமும் பாதிக்கும். 2-ம் தேதி நடக்கவிருக்கிற உண்ணாவிரத போராட்டத்தில் இந்த ஆன்லைன் வர்த்தகத்தின் பாதிப்பை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.