நீலகிரி: ஊட்டியில் துணைவேந்தர்கள் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்ற காலை தொடங்கி வைத்தார்.

தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள்மாநாடு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும்,நாளையும் (திங்கள், செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. இந்த  2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.  மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாட்டில், புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி ஆகிய கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில், பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல்அலுவலர் ஸ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்று கின்றனர்.

இன்று காலை  உதகையில் உள்ள ராஜ்பவனில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் வரவேற்றார்.

மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து வந்தது. தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியுள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு சுதந்திரமாக வந்து செல்லத் தொடங்கியுள்ளனர். அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. மாவோயிஸ்டுகளின் பிரச்சினை அதிகமாக இருந்தது. ஆனால், அரசின் துரித நடவடிக்கையால் தற்போது மாவோயிஸ்ட் பிரச்சினை வெகுவாகக் குறைந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. நாடு ஒரே குடும்பம். இங்கு எந்த வித சமூக ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது.

அனைத்து குடிமக்களும் அமைதியாக வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு முந்தைய கல்வி முறை அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. தற்போது நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இந்தியா வரும் 2047ல் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும்.

கடந்த 10ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நம்மை அச்சுறுத்தி வந்த நாடுகள் கூட தற்போது நம்மைக் கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு உதாரணம், உக்ரைன் – ரஷ்யா போரில் எந்த நாட்டிற்கும் இந்தியா அடிபணியாமல் சுதந்திரமாக முடிவை எடுத்தது.

இந்திய அளவில் 70 சதவீத மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களையே படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும்போது திறமையான வர்களாக இருக்க வேண்டும். மாணவர்களிடத்தில் பன்முக திறமையை உருவாக்க பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பாடுபட வேண்டும். இந்தியாவை முதன்மை நாடாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பல்கலைக்கழகங்கள் பன்முக திறன் கொண்ட மாணவர்களை உருவாக்குவது கடமை. அதற்கான வாய்ப்புகளை பல்கலைக்கழகங்கள் கட்டமைக்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநிலஅரசே நியமிக்கும் சட்டமசோதா! சட்டப்பேரவையில் இன்று தாக்கல்…