சென்னை:

ரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது. மேலும், அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகளுக்கான விதிகளை உருவாக்கவும்  வலியுறுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் அரசுத்தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள்  குறித்த விதிகளை தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்காமல் அரசு தலைமை வழக்கறிஞரே தேர்வு செய்து நியமிக்கிறார் என குற்றம் சாட்டினார்.

ஆனால், அரசு தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் தமிழக அரசுக்கு அனுப்பும் பட்டியலில் இருந்து தலைமை வழக்கறிஞர், பொதுத்துறை, உள்துறை மற்றும் சட்டத் துறை செயலாளர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுத்து அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக கூறியது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே உள்ளன என்றும், நியமன நடைமுறைகளுக்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

மேலும், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக  விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான விதிமுறைகளை வகுத்து வெளியிட வேண்டும் என்றும்,  அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்யக் கூடாது எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.