மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படம் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழர்களின் அடையாளமான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே எப்போதும் நமது நினைவில் இருப்பது ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆகும். புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் உலக ப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமாகிய உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் குவிந்துள்ளதால் அலங்காநல்லூர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்காகவும் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக அலங்காநல்லூர் வரும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்காக சிறப்பு மாடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு காரும், யாருக்கும் பிடி கொடுக்காமல் முதலிடம் பிடிக்கும் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,  ஜல்லிக்கட்டு காளை தூக்கி வீசியதில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப் படும் என தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 877 காளைகளும், 345 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனர். இதில் ஒருவர் பலியான நிலையில், திருச்சி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஒருவர் பலியானார். அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ,.3 லட்சம் நிதி வழங்கப்படும என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பலியான வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.