சென்னை: அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு 4 ஆண்டுகளுக்குப் பிறகு  இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு இறுதியாக 2018ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதனை பரிசீலித்த தமிழக அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இணைய வழி இடமாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறை தொடர்பான அரசாணையை 08.11.2022 அன்று வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, www.tngasa.in என்ற இணைய தள முகவரி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டன.

மொத்தம் பெறப்பட்ட 569 விண்ணப்பங்களில் காலிப்பணியிடமின்மை மற்றும் 50 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணிபுரியும் இடங்கள் ஆகிய காரணிகள் தவிர 192 ஆசிரியர்களுக்கு அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்த அரசு கல்லூரிகளுக்கு வெளிப்படையான பணியிடமாறுதல் கல்லூரி ஆணைகள் வழங்கப்படவுள்ளன.  அதன் அடிப்படையில் 10 கல்லூரி ஆசிரியர்களுக்கு அமைச்சர் பொன்முடி ஆணைகளை வழங்கினார்.