சென்னை: அரசுப் பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திட வேண்டும் என இன்று நடைபெற்ற போக்குவரத்துத்துறை  ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (26.07.2021) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் சேவைகள் குறித்தும், போக்குவரத்துத்துறை அலகுகளின் செயல்பாடுகள், குறிப்பாக 8 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அரசுப் பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், தடங்களை மறுஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பொதுப் பேருந்து போக்குவரத்து அமைப்பு, பேருந்து சேவைகள், போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்வது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது,  போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை செயல்பாட்டுத் திறன், நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் இணையதள சேவைகள் செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், சாலை போக்குவரத்து நிறுவனம், அதன் ஓட்டுநர் பயிற்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு, தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இரயில்வே திட்டங்கள் மற்றும் விமான நிலைய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்தும், சுற்றுச்சூழல் மாசினை குறைத்திடும் வகையில், டீசலுக்கு பதிலாக மாற்று எரிசக்தி மூலம் அதாவது மின்கலன், இயற்கை எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்குதல் குறித்தும்,

எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக போக்குவரத்துத் கழகங்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை மையங்கள் அமைப்பது குறித்தும், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரியமின் தகடுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச.கிருஷ்ணன்,இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா,இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளர் திரு.எஸ். நடராஜன், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.