டெல்லி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேரில் தேடப்பட்டு வந்த கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருக்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தமிழக காவல்துறையினர் அங்கு சென்ற நிலையில், அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த நிலையில், அவரை டெல்லியில் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபலமான கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின்படி அவர் புகார் பதிவு செய்து, சிவசங்கர் பாபாவை விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் முன் வந்தனர். ஆனால், அவர், டோராடூனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து  காவல்துறையினர் அங்கு சென்றனர். இதையறிந்த சிவசங்கர் பாபா அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார், அவரை கைது செய்ய தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் வலைவீசி வந்தனர். மேலும் சிவசங்கர் பாபா நேபாளத்திற்கு தப்பிச்செல்லாமல் தடுக்க சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.