சென்னை: “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”ஐ தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  “முதலீட்டாளர்களை வரவேற்கும் MOST WELCOMING STATE ஆக தமிழ்நாடு இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின், உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்றும்,   நாங்கள் துறை வாரியாக மேற்கொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டு சந்திப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்து சாதனைகளையும் படைத்திருக்கிறோம் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.1.2024) சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”-யை தொடங்கி வைத்து, ஆற்றிய விழாப்பேருரை பின்வருமாறு ;- பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் நான் சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. இன்று காலையிலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் இங்கு வந்தவுடன், முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை  எனக்கு வந்துள்ளது.

உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் எனது அருமை சகோதர, சகோதரிகளே! நீங்கள் அனைவரும் சமத்துவத்தைப் போற்றிய வள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும் பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறீர்கள். பல வரலாற்றுப் பெருமைகளையும், புகழையும் கொண்ட தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமின்றி, உங்கள் சகோதரனாக வருக, வருக, வருக என நான் வரவேற்கிறேன்.

தொழில் துறையில் மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம்தான், தமிழ்நாடு! பண்டைய காலத்தில் இருந்து கடல் கடந்தும் வாணிபம் செய்தவர்கள்! அதனால்தான், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” – என்று தொழிலை ஊக்குவிக்கும் பழமொழி உருவானது!

இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு, முன்மாதிரி மாநிலம்! 1920-ஆம் ஆண்டு ‘தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு’ எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனால்தான், தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மாநிலமாக இருப்பதால், இதற்கான திறமையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக கிடைத்தார்கள்.

சிறந்த தொழில் அதிபர்களும், திறமையான தொழிலாளர்களும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு, உலகத் தொழில் முனைவோரான நீங்கள் வந்திருக்கிறீர்கள். நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதுடன் எனது உளமார்ந்த நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டிற்கு தலைமையேற்க வந்திருக்கும் மாண்புமிகு ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களை நான் நெஞ்சார வரவேற்கிறேன். மாண்புமிகு திரு. பியூஷ் கோயல் அவர்களது குடும்பம் அரசியல் குடும்பம். அப்பா, அம்மா இரண்டு பேருமே அரசியலில் கோலோச்சியவர்கள்.

வங்கித் துறை பணியாளராக வாழ்க்கையை தொடங்கி நிதி மற்றும் வர்த்தக துறையில் தனித்துவம் படைத்தவர்  பியூஷ் கோயல் அவர்கள். அவர் இங்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களையும் – தொழில் துறை செயலாளர் திரு. அருண்ராய் அவர்களையும் – அனைத்துத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகளையும் – அரசு உயர் அலுவலர்களையும் என அனைவரையும் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள்.

உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு, கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பது மூலமாக, மேலும், தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுத்துக் கொடுக்கும்! முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற எல்லாருக்கும் இந்த மாநாடு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இந்த மாநாட்டில், நாங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை உங்களுக்கு அளிக்க இருக்கிறோம். தலைமைத்துவம் – Leadership, நீடித்த நிலைத்தன்மை – Sustainability, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி -Inclusivity என்ற கருப்பொருள்களில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே, ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாடு தமிழ்நாடுதான்’ என்று தமிழ்நாடு அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

இந்த நிலையை மேம்படுத்துகின்ற வகையிலேயும், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறனை உலகுக்கு வெளிப்படுத்தவும், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறோம். நாங்கள் துறை வாரியாக மேற்கொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டு சந்திப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்து சாதனைகளையும் படைத்திருக்கிறோம்.

உங்களையெல்லாம் காணும்போது, இந்த சாதனைகளையெல்லாம் விஞ்சக்கூடியதாக இந்த மாநாடு அமையப் போகிறது என்ற நம்பிக்கை பிறக்கிறது. தொழில்மயமாக்கல் வரலாற்றில், ஒரு மகத்தான அத்தியாயமாகவும் இந்த மாநாடு இருக்கப் போகின்றது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றவேண்டும் என்ற குறிக்கோளோடுதான், 2030-ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று ஒரு இலட்சிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன். உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, மற்றும் வேலைவாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

ஒரு மாநிலத்தில், தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மேல் நல்லெண்ணம் இருக்கவேண்டும்! அங்கு சட்டம் – ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவவேண்டும்! ஆட்சியாளர்கள் மேல் உயர்மதிப்பு இருக்கவேண்டும்! அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும்!

2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்களெல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது! முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று முன்கூட்டியே கணித்து, இன்றைய தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

வணிகம் புரிதலை எளிதாக்கி வருகிறோம். திறன்மிகு பணியாளர்களை உருவாக்கி வருகிறோம். நாளைய தொழில் மாற்றங்களைக் கணித்து வைத்திருக்கிறோம். தொழிலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடையே இணைப்பினை ஏற்படுத்தி வருகிறோம். தொழிற்சாலைகளுக்கேற்ற தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வருகிறோம். இளைஞர்களின் திறனுக்கேற்ற வேலைகளை உறுதி செய்து தருகிறோம். திறமையான இளைய சக்தியை உருவாக்கித் தருவதை நோக்கமாகக் கொண்டது, இன்றைய தமிழ்நாடு அரசு.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தமிழ்நாட்டில் இருந்துதான் உருவானார்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் அடியொற்றி, பெண்களுக்குச் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல்ரீதியாக அதிகாரமளிக்கின்ற திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியாக செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

பெண்களுக்கு பொருளாதார விடுதலை என்பது இந்த திராவிட மாடல் அரசின் முழக்கம்! அதனால்தான், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” “புதுமைப் பெண் திட்டம்” “விடியல் பயணம்” “தோழி விடுதி” என்று அறிவித்து, பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்!

கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்குகின்ற வகையில், 200-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை, தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை, தமிழ்நாடு தரவு மையக் கொள்கை, தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை, செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குப்படுத்துவதற்கான புதிய கொள்கை, தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை,

தமிழ்நாடு எத்தனால் கொள்கை, தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை, தமிழ்நாடு சரக்கு போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து திட்டம், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்பு திட்டம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை, தமிழ்நாடு சுற்றுலா கொள்கை, தென்னை நார் கொள்கை எனப் பல்வேறு கொள்கைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய இலட்சியம்! அதனால்தான் தொழில் திட்டங்கள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு வருகிறது! பல பின்தங்கிய மாவட்டங்களில், பெரும் அளவில், வேலைவாய்ப்பு உருவாக்குகின்ற விதமாக முதலீட்டுத் திட்டங்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அந்த மாவட்டங்களில் இருக்கின்ற இளைஞர்களுக்கும், மகளிர்களுக்கும் அவரவர்கள் வசிக்கின்ற மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுவது மட்டுமில்லாமல், அந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே தங்களுடைய தொழில்திட்டங்களை அமைத்திருக்கிற பல நிறுவனங்கள், தங்களுடைய திட்டங்களை நன்றாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள் என்பது, தமிழ்நாட்டின் சிறப்பான தொழில் சூழலுக்கான அத்தாட்சி! மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான, ஹூண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

130-க்கும் மேற்பட்ட “Fortune 500” நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருப்பது, தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்திருப்பதற்கு இது ஒரு சான்று! முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணி நிலை வகிக்கிறது! உலக அளவிலான முதலீட்டாளர்களை நன்கு வரவேற்கும் மாநிலமாக அதாவது ‘Most Welcoming State-ஆக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறுகிற இரண்டு நாட்களிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மூலதனம் நிறைந்த மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள், சோலார் PV செல்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளையும், ஜவுளி மற்றும் ஆடைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.  உலகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி வல்லுநர்களும், தலைமையாளர்களும் பங்கேற்கின்ற கருத்தரங்குகள், புத்தாக்கம் தொடர்பான நிகழ்ச்சிகள், இளம் தலைவர்கள் வணிகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள், மகளிர் தலைமையாளர்களின் குழு விவாதங்கள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

எட்டு துறைகள் சார்ந்த பெரிய தொழிற்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான அரங்குகள் மற்றும் தமிழ்நாடு சூழலமைப்பு அரங்கம் என்று பல்வேறு விதமான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. பன்னாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு, பங்குதாரர் நாடுகள் தமிழ்நாட்டின் உடனான தங்களுடைய ஆழமான மற்றும் நீண்டகால ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட, எதிர்கால சந்ததியினரை இம்மாநாட்டிற்கு ஈர்த்துள்ளோம். புத்தொழில்களுக்கென்று ஒரு தனி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் முதலீட்டாளர்கள், இந்தத் துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடுவார்கள்! குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் ‘வாங்குவோர் – விற்பனையாளர் சந்திப்பு’ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது மூலமாக 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விற்பனையாளர்களுடன் கலந்துரையாடுவார்கள்! உலகம் முழுவதும் இருக்கின்ற முதலீட்டாளர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களது முதலீடுகளை நாங்கள் கோரியுள்ளோம்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக, முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறோம். அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாட்டை நாங்கள் முதன்மை பெறச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ வேண்டும் என்பதே எங்களது இலட்சியம்! இந்த முயற்சிகளுக்கு மகுடம் சூட்டிடும் வகையிலும், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டின் வலிமையை உலகிற்குத் தெரிய வைத்திடும்!

இங்கு கூடியிருக்கும் முதலீட்டாளர்களாகிய உங்கள் மத்தியில் உரையாற்றுவது உள்ளபடியே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  தொழில்துறையில் பெரும் சாதனை படைத்த அனுபவசாலிகள் இந்த அரங்கில் நிறைந்துள்ளீர்கள். இங்கு பல ஆண்டுகளாக தொழில் புரியும் அனுபவமும் உங்களுக்கெல்லாம் உள்ளது.  சுருங்கச் சொன்னால், உங்களையும், உங்கள் வணிகத் திட்டங்களையும், உலகளாவிய முதலீட்டாளர்களோடு இணைத்துக் கொள்ளும் பொன்னான வாய்ப்பினை நாங்கள் இந்த மாநாடு மூலமாக ஏற்படுத்தித் தந்துள்ளோம்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்! அனைவரும் சேர்ந்து எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்! ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனவை நனவாக்குவோம் வாருங்கள் என மனதார அழைப்பு விடுக்கிறேன்.

இந்த மாநாட்டினால் தமிழ்நாட்டின் பொருளாதரம் வளரும்! அதன்மூலம் இந்தியப் பொருளாதாரமும் உயரும்! அன்புக்குரிய முதலீட்டாளர்களே, உலகத்தின் பல நாடுகளிலிருந்து, அமைதியில் சிறந்த, முதலீட்டாளர்களின் நண்பனாக திகழுகிற தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வந்து இருக்கிறீர்கள். என் தலைமையிலான தமிழ்நாடு அரசு, உங்களுக்கு அனைத்து வகையிலும், உறுதுணையாக இருக்கும்! உங்களுடைய உணர்வுகளை மதிக்கும்! தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்யும்! ஏனென்றால், இது, “சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!” என்ற ஆட்சி நடத்துகின்ற திராவிட மாடல் அரசு!

வாருங்கள்… முதலீடு செய்யுங்கள்… தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் உங்கள் பங்களிப்பை தாராளமாக வழங்குங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன்!.

இவ்வாறு கூறினார்.