சென்னை: தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில்  திருப்பி கொடுங்கள் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில், தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு போன்றவற்றை கொடுப்பதை அரசியல் கட்சியினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோல,  கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் ஏராளமான கட்சியினரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், இன்னும் பலருக்கு அநத் பணம் திருப்பி வழங்கப்படாத நிலை உள்ளது.
அந்த நேரத்தில், விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுக்காவில் உள்ள  ஆண்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி  ஒருவரின் தோட்டத்தில், 6 லட்சத்து 78 ஆயிரத்து 10 ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுப்பதற்கு வைத்திருந்ததாக தேர்தல் ஆணையம் வழக்கு தொர்ந்தது.
ஆனால், அந்த விவசாயியோ, அது தனது இடத்தில் வளர்ந்த  சவுக்கு மரங்கள் வெற்றி  விற்றதன் மூலம் கிடைத்த பணம் இது எனக் கூறி, அதைத் திருப்பித் தரக் கோரி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை வானூர் முன்சீப் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், மனுவில், தன்னிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் பணத்தைத் திருப்பித் தர கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை   நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரணை நடத்தினார். அப்போது,   வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத பட்சத்தில், விவசாயி கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை வழங்க மறுக்க முடியாது எனக் கூறி, நான்கு வாரங்களில் பணத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்டு அளித்த விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்காமல் தங்கள் கடமையைத் தவறக் கூடாது என வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனமும் தெரிவித்துள்ளார்.