திருப்பூர்:

 பள்ளிச் சிறுமிக்கு ஃபேஸ்புக்கில் நட்பான  இளைஞர், அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து தனது  நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில்  தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும்  சிறுமி, சமீபத்தில் பேஸ்புக்கில் கணக்குதுவங்கினார். அதில்   அவருக்கு நண்பராக அறிமுகமான இப்ராஹிம், சிறுமியுடன் தொடர்ந்து  இன்பாக்ஸில் பேசியிருக்கிறார். பிறகு சிறுமியின் தொலைபேசி எண்ணை வாங்கி  பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சிறுமியின் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில்,  அவரது வீட்டிற்குச் சென்று தனிமையில் சந்தித்துள்ளார்.

இப்ராஹிமின்  ஆசை வார்த்தைகளில் மயங்கிய சிறுமி,  அவருடன்  சென்னைக்கு வந்தார். பிறகு புதுச்சேரிக்கு சென்றுள்ளனர். அங்கு தனது நண்பர் பிரபாகரன் என்பவர் நடத்தும் விடுதியில் சிறுமியை தங்க வைத்த இப்ராஹிம், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இப்ராஹிமின் மொபைல் போனை எதேர்ச்சியாக பார்த்த சிறுமி, அதில்  பல பெண்களின் ஆபாசப்புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.   இது குறித்து இப்ராஹிமிடம் கேள்வி எழுப்பவே, அவரை விடுதி அறையிலேயே அடைத்து வைத்துள்ளார் இப்ராஹிம். மேலும்,  இப்ராஹிமின் நண்பரான விடுதி நிர்வாகி பிரபாகரனும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அங்கிருந்து தப்பியோடி திருப்பூர் வந்தடைந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.