தமிழ்நாட்டைச் சேர்ந்த மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஏற்கனவே 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் மூலம் இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் மாநிலம் என்ற பெருமையை அடைந்துள்ளது தமிழ்நாடு.

பொருளின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகிறது இந்த புவிசார் குறியீடு.

மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு , ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

புவிசார் குறியீட்டிற்காக ஏற்கனவே விண்ணப்பித்த நிலையில் இதற்கான ஆட்சேபனையை தெரிவிக்க வழங்கப்பட்ட நான்கு மாத கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.