கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சிவபெருமானின் அம்சம் ஆஞ்சநேயர் என்பார்கள். இராமாயணத்தில் மகாவிஷ்ணு இராமராகவும், மகாலட்சுமி சீதையாகவும், ஆதிசேஷன் இலட்சுமணனாகவும் இப்படி ஒவ்வொரும் ஒரு கதாபாத்திரம் ஏற்றார்கள். அதே போல் சிவபெருமான் ஏற்ற கதாபாத்திரம் ஆஞ்சநேயர். இதன் அடிப்படையில் தான் இங்கு சிவலிங்க வடிவில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இங்கு சிவனை நினைத்து வழிபட்டால் ஆஞ்சநேயர் தெரியமாட்டார். ஆஞ்சநேயரை நினைத்து வழிபட்டால் சிவன் தெரிய மாட்டார். இந்த அதிசியத்தை அபிஷேகத்தின் போது நாம் காணலாம். இவர் அபிஷேகத்தில் சிவசொரூபமாகவும், அலங்காரத்தில் விஷ்ணு சொரூபமாகவும் இருக்கிறார். இவரது வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் ஆட்சி செய்கிறார்கள்.

கடல், மலை, நிலவு, குழந்தை, இறைவன் இவர்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. அதே போல் இங்குள்ள ஆஞ்சநேயரின் அழகை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. இவரை தரிசிக்க வருபவர்கள் இவரது அழகில் மயங்கி, இவரிடம் கேட்டு பெற வேண்டியதை கேட்காமல் போனாலும் கூட இவரத வலது உள்ளங்கையில் குடியிருக்கும் ஐஸ்வரிய லட்சுமி ஐஸ்வரியத்தை அள்ளிக்கொடுத்திடுவாள். முருகனுக்கு வேல் அழகு. சிவனுக்கு சூலம் அழகு. விஷ்ணுவுக்கு சக்கரம் அழகு. அதே போல் இத்தல ஆஞ்சநேயருக்கு கதை அழகு. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து ஒரு பகுதி விழுந்த இடம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. அந்த மலையைப்பார்த்தபடி மேற்கு பார்த்த ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு பரிவார மூர்த்திகள் எட்டு பேர். அந்த எட்டு பேர்களில் ஒருவர் எமன். அந்த எமனுக்கு அனுக்கிரகம்புரிய தென் திசையை நோக்கியபடி ஆஞ்சநேயரின் திருப்பாதம். எனவே இவரை வணங்கினால் எமபயம் என்பதே இல்லை.

அதே போல் குபேரதிசையான வடக்கு நோக்கிய வால். இவரத வாலின் நுனியில் நவகிரகமும் அடக்கம். இவரது வாலின் அமைப்பே ஓம்கார வடிவில் அமைந்திருக்கும். ஆரம்பம் கணபதி என்றால். அதை வெற்றிகரமாக முடித்து தருவது ஆஞ்சநேயர். இந்த தத்துவத்தை விளக்கும் விதமாக ஒரே கர்ப்பகிரகத்தில் மகாகணபதியும், ஆஞ்சநேயரும் திருநெல்வேலி கெட்வெல் வளாகத்தில் உள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார்கள். இத்தலம் சைவ வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இந்த ஆஞ்சநேயருக்கு வாலின் ஆரம்பத்தில் பொட்டுவைக்க ஆரம்பித்து 48 நாட்கள் தொடர்ந்து பொட்டு வைத்து நுனியில் முடித்தால் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

சாந்த சொரூபியான இவரை வணங்கினால் செல்வ செழிப்பு, எமனிடம் பயமில்லாத தன்மை, கல்வி, வீரம், பக்தி, குடும்ப ஒற்றுமை, உத்தியோக உயர்வு, எதிரி பயமில்லா நிலை ஆகியவை கிடைக்கும்.

ஆஞ்சநேயருக்கு இராஜஅலங்காரம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.