சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மக்கள் கூடும் முக்கியமான 9 பகுதிகளில் கடைகளை அடைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, சென்னையில், பொதுமக்கள் முக்கவசம் அணியாமல் வெளியே நடமாடினால், அவர்களுக்கு ‘ஸ்பாட் பைன்’! விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்து உள்ளார். மேலும், சென்னை மக்கள், வியாபாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே  கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்றும் கூறினார்.

தமிழகத்தில்  சில பகுதிகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், கண்காணிக்கவும் மாவடட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னையில், மக்கள் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  இன்று முதல் மார்க்கெட்டுகள், கடை வீதிகள் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கடைகள் தோறும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சானிடைசர் வைக்கப்பட்டுள்ளதா? சமூக இடைவெளி  கடைபிடிக்கப்படுகிறதா? முகக்கவசம் அணிகிறார்களா? என்பது குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி,

சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடைகள், வணிக நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகிறது. இன்று முதல் முக்கிய இடங்களில் போலீசாருடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பார்கள். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வணிக நிறுவனங்கள் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும், மேலும் அந்த பகுதியும் மூடப்படும்.

கண்டிப்பாக அனைத்து கடைகள் முன் பகுதியில் சானிடைசர் வைக்கவேண்டும். ஒரே நேரத்தில் பொதுமக்களை அதிகளவு அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருக்கின்ற கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வரவேண்டும். தேவை இல்லாமல் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தெருக்களில், கடை வீதிகளில் முகக்கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த மண்டல அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு அபராத நடவடிக்கை எடுக்கப்படும்.  சென்னை மக்கள், வியாபாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.