நெல்லை:

திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார்.

உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாகி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்திலும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,  நெல்லையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்திகுறிப்பில் கூறப்பட்டு  இருப்பதாவது,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், தற்போது  காலையில் பொதுமக்கள் வசதிக்காக கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், நெல்லையில் ஏப்.26, மே.3 ஆகிய 2 நாள்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம்  மருத்துவமனை, மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.