இதுகுறித்து தமிழகஅரசு விடுத்திருந்த அறிக்கையில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 29.4.2020 புதன் இரவு 9 மணி வரை (4 நாட்கள்) அமல்படுத்தப்படும்.
சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 28.4.2020 செவ்வாய் இரவு 9 மணி (3 நாட்கள்) வரை அமல் படுத்தப்படும்.
ஊரடங்கின்போது, அத்தியாவசிய தேவைக்காக மெடிக்கல் மற்றும் மருத்துவமனைகள் மட்டுமே இயங்கும் என்றும், ஊரடங்கை மீறி வெளியே செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோய் தொற்று சென்னையில் தீவிரமாகி வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ள 15 மண்டலங்களிலும் சேர்த்து இதுவரை 495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்துதலில் அவைக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் இன்று முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்துகடைகள், மருத்துவமனைகள் தவிர
வேற எந்த கடைகளும் திறந்திருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை முதலே சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதற்கிடையில் இன்று அதிகாலை முதலே சென்னையின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ததால், சென்னை கோயம்பேடு மார்க்கெட் உள்பட பல பகுதிகளில் ஆட்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டமின்றி அமைதியாக காணப்படுகிறது.
ஊரடங்கை மீறி மக்கள் நடமாட்டம் அதிகம்க காணப்படும் கோயம்பேடு மார்க்கெட் பகுதி, மற்றும் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், அண்ணா சாலை உள்பட பல இடங்களில் உள்ள மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அதுபோல ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள மற்ற மாவட்டங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.