சென்னை

நாளை முதல் அனைத்து புறநகர் ரயில்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த தொடர் மழையால், பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, ரயில் சேவை முடங்கியது.

குறிப்பாக சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் தடத்தில் பேசின்பாலம் – வியாசர்பாடி இடையே 14-வது பாலத்தில் மழைநீர் தேங்கியது. மேலும், ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது. சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர் – பூங்கா ரெயில் நிலையம் இடையே, தாம்பரம் – பல்லாவரம் இடையே, பரங்கிமலை ரயில் நிலையத்திலும் மழைநீர் தேங்கி நின்றது.

இந்த பகுதிகளில் நீரகற்றும் பணிகள் நடந்ததால் ,சென்னையில் புறநகர் ரயில்கள் இன்றும் இயங்கவில்லை. பணிகள் முடிவடைந்ததால் நாளை முதல் அனைத்து புறநகர் ரயில்களும் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.