சென்னை

நாளை மருத்துவப் படிப்புக்கான 2 ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.   இந்த கலந்தாய்வு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக சுமார் 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு  நடத்தப்படுகிறது.

கடந்த ஜூலை 25ஆம் தேதி தொடங்கிய முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 14 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதில் ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் அந்தந்த கல்லூரிகளில் தற்போது சேர்ந்துள்ளனர். மீதம் உள்ள காலியிடங்களுக்கான 2-வது சுற்று கலந்தாய்வு குறித்த அறிவிப்பைத் தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது.

நாளை  முதல் 2 ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. தங்கள் விருப்ப இடங்களைத் தேர்வு செய்வது, ஒதுக்கீடு ஆணை பெறுவது, கல்லூரிகளில் சேருவது என அவகாசம் வழங்கப்பட்டு செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவுபெற உள்ளது.

இந்த கலந்தாய்வு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 118 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 648 நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அதேபோல் 85 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும், 818 நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும் நடத்தப்பட  உள்ளது.