திருப்பதி

நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

 

வரும் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது.  இந்த பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குரார்ப்பணமும் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழாவும் கோலாகலமாகத் தொடங்குகின்றன.

நாளை முதல் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளன.

இதன்மூலம் இலவச தரிசனத்திற்கு நேரம் குறையும் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  ஆண்டு தோறும் ஏழுமலையான் கோவிலில் இரவு 7 மணிக்குக் கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் 19-ந்தேதி ஆகம விதிகளின்படி 30 நிமிடங்களுக்கு முன்பாக 6.30 மணிக்குத் தங்கக் கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.

இந்த பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த மாதம் 24 ஆம்தேதி வரும் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

திருப்பதி தேவஸ்தானம்

“நேற்று திருப்பதியில் 65,937 பேர் தரிசனம் செய்தனர். மேலும் 24,101 பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தினர். மேலும் ரூ.4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது” 

என்று தெரிவித்துள்ளது.