பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் இன்று முதல் அமலாகிறது.

கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ ரேஷன் அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா மாதம் ரூ.3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு தலா ரூ.1,500, பெண்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஆகிய 5 இலவசத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருப்பதால், 5 இலவசத் திட்டங்களையும் அமல்படுத்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் ஜூன் 11-ந் தேதி (அதாவது இன்று) முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

கர்நாடக போக்குவரத்துக் கழகங்களின் கீழ் செயல்படும் பெங்களூரு பி.எம்.டி.சி, கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம். அரசு சொகுசு பேருந்துகளான குளிர்சாதன வசதி, படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகளைத் தவிர்த்து மற்ற அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இது காங்கிரஸ் அரசின் முதல் திட்டம் என்பதால், இதனைக் கோலாகலமாக நடத்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளனர்.

இந்த திட்டத்தின் தொடக்க விழா பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கர்நாடக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.