டில்லி

ன்று முதல் நாடெங்கும் உள்ள 15-18 வயதான10 கோடி  சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 145 கோடிக்கும் அதிகமான டோஸ் போடப்பட்டுள்ளது.  இந்தியாவில்  ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், 15-18 வயது சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இன்று முதல் அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது.

தடுப்பூசி போட தகுதி வாய்ந்த சிறுவர்கள் கோவின் ஆப் மூலமாக ஆதார் அல்லது 10ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம். தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.  15-18 வயது சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.  நேற்று மாலை வரை நாடு முழுவதும் 6.35 லட்சம் சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 10 கோடி இருப்பதாக அரசு தரப்பில் புள்ளி விவரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் போது, மற்ற வயதினர்களுக்கான தடுப்பூசிகளும் கலக்கப்படுவதைத் தவிர்க்க, 15-18 வயதினர்களுக்காகத் தனி தடுப்பூசி மையம், தனி அமர்வுகள் அமைக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் 33 லட்சத்து 20 ஆயிரம் சிறார்கள் 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். எனவே இவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.