சென்னை

பிரதமர் மோடியை திமுக அரசு வரவேற்பது குறித்து அக்கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

 

கடந்த ஆண்டுகளில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது திமுக கடும் எதிர்ப்பை காட்டி வந்தது.  பல முறை அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவது, கருப்பு  பலூன்களை பறக்க விடுவது, கோ பேக் மோடி என்னும் ஹேஷ் டாக் ஐ சமூக வலைத் தளங்களில் டிரெண்ட் செய்வது ஆகியவற்றை திமுக நடத்தியது.  தற்போது பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இது குறித்து திமுக மகளிரணி செயலரும் நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி செய்தியாளர்களிடம்,

“பிரதமர் மோடி மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கவே தமிழகம் வருகிறார்.  ஆகவே அவரது வருகையை  திமுக அரசு எதிர்க்கவில்லை.  கருத்தியலும் அரசும் வேறு ஆகும். அதிமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை திமுக எதிர்த்தது குறித்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

முந்தைய அதிமுக அரசு மத்திய பாஜக அரசின் அனைத்து செயல்பாடுகளையும், சட்டங்களையும் ஆதரித்தது. அதிமுக வேளாண் சட்டங்கள், குடியுரிமைச் சட்டங்கள் என்று மக்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது.  திமுக வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டங்கள் என்று மக்கள் நலன்களுக்கு எதிரான பாஜக அரசின் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆகவே, இந்த விஷயத்தில் அதிமுக, திமுகவை ஒப்பிட வேண்டாம்.”

எனத் தெரிவித்துள்ளார்.