சென்னை

இன்று முதல் சென்னை ஈவெரா சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

சென்னை ஈ வெ ரா சாலையில்  மழைநீர் வடிகால் பணிகள் நடக்கவுள்ளதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“நெடுஞ்சாலைத் துறையினர் புரசைவாக்கம் ஈவெரா பெரியார் சாலையில், ரித்தர்டன் சாலை சந்திப்பு அருகே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ள உள்ளனர். எனவே சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) இரவு 10 மணிமுதல் ஆகஸ்ட் 21-ம் தேதி அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

புரசைவாக்கம் ஈவெரா பெரியார் சாலையில் காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பில் இருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வாகனங்கள் நேராக செல்ல அனுமதியில்லை. இச்சாலையில் வரும் வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி காந்தி இர்வின் சாலை, அழகுமுத்துக்கோன் சிலை, எழும்பூர் ரெயில் நிலையம், உடுப்பி சந்திப்பு, நாயர் மேம்பாலம் வழியாக ஈவெரா பெரியார் சாலையை  அடையலாம்.

மேலும் ஈவெரா பெரியார் சாலையில் ரித்தர்டன் சாலை சந்திப்பில் இருந்து ஈவிகே சம்பத் சாலை நோக்கி வாகனங்கள் நேராக செல்ல அனுமதியில்லை. இந்த சாலையில் வரும் வாகனங்கள் ஈவெரா பெரியார் சாலையில் ரித்தர்டன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ஈவிகே சம்பத் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ஈவெரா பெரியார் சாலை வழியாகச் செல்லலாம்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.