சென்னை

டுத்த வாரம் முதல் சென்னையில் இருந்து அயோத்தி மற்றும் லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கு விமானச் சேவை தொடங்க உள்ளது.

வரும் 22 ஆம் தேதி அன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.  உத்தரப்பிரதேச மாநில அரசு  இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அங்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அயோத்தியில் சர்வதேச தரத்துடன் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமானச் சேவை தொடங்கப்படும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விமானச் சேவை தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதன்பின்னர் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இருந்து லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கு அடுத்த வாரம் முதல் விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து லட்சத்தீவுகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது.