மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) போலி டிகிரி சான்றிதழ் சமர்ப்பித்து இயக்குநர் பதிவு பெற்ற DGCA இயக்குநர் குறித்த தகவல் அம்பலமாகி உள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) இயக்குனராக உள்ள ஒருவர் பதவி உயர்வு பெறுவதற்காக போலியான கல்வித் தகுதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

ரவீந்தர் சிங் ஜம்வால் என்ற அந்த அதிகாரி சிக்கிமில் உள்ள EIILM பல்கலைக்கழகம் வழங்கியதாக சமர்ப்பித்த சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்ததை அடுத்து சிக்கிமில் உள்ள உயர்கல்வி இயக்குனரகத்திடம் இதுகுறித்து ஆய்வு செய்து விளக்கம் கேட்கப்பட்டது.

DGCAவின் இந்த கோரிக்கையை பரிசீலித்த சிக்கிம் உயர்கல்வி இயக்குனரகம் ரவீந்தர் சிங் ஜம்வால் கொடுத்த கல்வித் தகுதி சான்றிதழ் போலியானது என்பதை உறுதி செய்தது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ள ரவீந்தர் சிங் ஜம்வால் 2012 ம் ஆண்டு DGCAவில் உதவி இயக்குனர் பதவிக்கு தேர்வானார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு UPSC மூலம் தேர்வு செய்யப்படும் DGCAவின் துணை இயக்குனர் பதவிக்கு விண்ணப்பித்தார்.

இந்த துணை இயக்குனர் பதவிக்கான கல்வித் தகுதியாக ஏரோநாட்டிக்கல்/எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரோனிக்ஸ் அல்லது இயற்பியலில் எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருந்த நிலையில் இந்த பதவி ரவீந்தர் சிங் ஜம்வாலுக்கு கிடைத்தது.

5 ஆண்டுகள் துணை இயக்குனராக பணியாற்றிய ரவீந்தர் சிங் ஜம்வால் 2021ம் ஆண்டு இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். தற்போது வான்வெளி மற்றும் வான்வழி ஊடுருவல் சேவைகள் தரநிலைகள் மற்றும் விமானங்கள் தரநிலை இயக்குநரகத்தின் தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் அவரது கல்வித் தகுதி குறித்து DGCA சந்தேகம் எழுப்பியதை அடுத்து அவரது சான்றிதழ்கள் போலியானது என்று சிக்கிம் உயர்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து போலி சான்றிதழ்கள் மூலம் UPSC தேர்வில் மோசடி செய்து பதவி உயர்வு பெற்ற அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.