சென்னை

ஜூலை மாதம் முதல் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அதற்கு ஊழியர் சம்பளம், உபகரணங்கள் மற்றும் நிலக்கரி கொள்முதல், மின் விநியோக வழித்தடம், துணை மின் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுவதால், மத்திய மின் நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசிடம் இருந்து மின் வாரியம் வட்டிக்குக் கடன் பெறுகிறது. இந்த வகையில் மின் வாரியத்துக்கு தற் போது ரூ.1.59 லட்சம் கோடி கடன் உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 18-ம் தேதி இந்த நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. கடந்த ஆண்டு செப்.10-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.

இதையொட்டி வீடுகளுக்கு 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50-ம்,401-500 யூனிட் வரை ரூ.6-ம், 501-600 யூனிட் வரை ரூ.8-ம், 601-800 யூனிட் வரை 9-ம், 801-1,000 யூனிட் வரை ரூ.10-ம்,1,001 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டது. உயர் அழுத்தப் பிரிவில் தொழிற்சாலைகளுக்கான கட்டணம் ஒரு யூனிட் ரூ.6.35-ல் இருந்து ரூ.6.75 ஆகவும் உயர்த்தப்பட்டது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில், வரும் 2026-27-ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த 2023 ஏப்ரல் மாத நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவாக உள்ளதோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ர்ம்ச்ப்ர்ர், கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 4.70 சதவீதம் இருந்தது.இதன் அடிப்படையில் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்வாரிய அதிகாரிகள் இது குறித்து,

‘‘மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள அனுமதியின் பேரில், மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளித்து, கடன் அளவை குறைப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’

என்று தெரிவித்துள்ளனர்.