சென்னை

புறநகர் ரயிலில் டிசம்பர் 14 முதல் அனைத்து நேரமும் பெண்கள் பயணம் செய்யலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாகப் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன.  அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  மிகக் குறைந்த அளவில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு கொரோனா பணியாளர்கள் மட்டும் பயணிக்க முதலில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பிறகு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய அரசு ஊழியர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.  அதன் பிறகு பெண்கள் குறிப்பிட்ட நேரங்களில் பயணிக்கவும் அடையாள அட்டையுடன் உள்ள தனியார் ஊழியர்கள் பயணம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் டிசம்பர் 14 முதல் பெண்கள் எவ்வித நேரக் கட்டுப்பாடும் இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.  மேலும் அவர்களுடன் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பயணம் செய்யலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது/.