டில்லி

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்  உள்நாட்டு விமானச் சேவைகளில் 18 ஆம் தேதி முதல் 100% பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.    பிறகு சென்ற ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு குறைந்த அளவில் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டன.  இவற்றில் முதல் கட்டமாக 35% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது/

அதற்குப் பிறகு அது 50% ஆக அதிகரிக்கப்பட்டது.  பிறகு அது 85% பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.   இதைப் போல் வெளிநாட்டுப்  பயணிகளுக்கு அளிக்கப்படும் விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அந்த விதிகள்  தளர்த்தப்பட்டுள்ளன

இதைத் தொடர்ந்து தற்போது மத்திய விமானத்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகள் இன்றி பழைய நடைமுறையைப் பின்பற்றலாம் என அறிவித்துள்ளது.  அதன்படி வரும் 18 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் முன்பு போல் 100% பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலயங்கள் கொரோனா  பரவல் கட்டுப்பாடு வழிகாட்டுதல்களை  அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும்,  அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தொடர்பாக விதித்துள்ள கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.