இந்திய விடுதலைக்காக, ஆயுதப்போராட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) பணியாற்றிய தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள் இன்று மறைந்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த முனிசாமி என்பவரின் மகளாக 1926-ல்  பிறந்தவர் கோவிந்தம்மாள். தனது தந்தை வேலை நிமித்தமாக மலேசியா சென்றபோது அங்கு 8ம் வகுப்பு வரை படித்தார்.
0
பருவ வயதில், மலேசியாவில் ரப்பர் எஸ்டேட்டில் எழுத்தராக பணிபுரிந்த அருணாச்சலம் என்பவருடன்  திருமணம் நடந்தது.
அந்த காலகட்டத்தில், மலேசியாவில் மலாக்கா பிராந்தா என்ற இடத்தில்  கூட்டமொன்றில் நேதாஜி உரையாற்றியுள்ளார். அதனை கேட்ட அந்த இடத்திலேயே ராணுவ நிதியாக தான் அணிந்திருந்த 6 பவுன் தங்க வளையலைக் கழற்றிக் கொடுத்தார் கோவிந்தம்மாள்.
பிறகு தனக்கு உடமையான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தையும் ஐ.என்.ஏ. வுக்கு நன்கொடையாக கொடுத்தார்.
ஐ.என்.ஏ. ராணுவத்தில் பெண்களுக்கென “ஜான்சிராணி ரெஜிமெண்ட்” ஏற்படுத்தப்பட்ட போது,  1943-ல் அதில் சிப்பாயாக சேர்ந்தார். 1000 பெண்கள் கொண்ட அந்த படையில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு ரக துப்பாக்கிகள் சுடும் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த 100 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவர் கோவிந்தம்மாள்.
 
இந்திய தேசிய ராணுவத்தில் அவர் பணியாற்றிய சமயம்.  ராணுவ முகாமில் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் இவர் ஈடுபட்டிருக்கிறார்.
அங்கு மாறுவேடத்தில் வந்த நேதாஜி ராணுவ முகாமுக்கு செல்ல முயல… அவரை கோவிந்தம்மாள் தடுத்து நிறுத்தி அனுமதிக்க மறுத்துள்ளார்.. பிறகு நேதாஜி மாறுவேடத்தை களைத்த தன்னுடைய முகத்தை காட்டிய பிறகு தான் அவரை உள்ளே அனுமதித்துள்ளார். அதனால் நேதாஜியிடம் பாராட்டும் பெற்றுள்ளார் கோவிந்தம்மாள்.
1949 ம் வருடம், இவர் தனது கணவருடன் ஆம்பூருக்கு வரவேண்டிய சூழல். வறுமை நிலையில், இவரது கணவர் லாரி டிரைவராக பணியாற்றினார்.  அவரது கணவர் 1960-ல் நடந்த ஒரு விபத்தில் இறந்தார்.
 
பிறகு கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைப்பது, , மாவு அரைவை மில்லில் கூலி வேலை என பல்வேறு பணிகளை செய்தார்.
ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மாநில அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியத்தை பெற்று வாழ்ந்து வந்தார்.
தனது சொத்துக்களை எல்லாம் தேச விடுதலைக்காக அளித்த இவர் கடைசி வரையில் சொந்த வீடில்லாமலே வாழ்ந்து மறைந்தார்.