டெல்லி: கொரோனாகாலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி டிசம்பர் 2023 வரை நடைமுறையில் இருக்கும் என மத்தியஅமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார்.


கோவிட் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் டிசம்பர் 2023 வரை இணைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக, புதிய திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 80 கோடிக்கு மேல் இலவச உணவு தானியம் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

மத்தியஅரசின் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.‘ கொரோனாகாலக்கட்டத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்தியஅரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை  அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் ஏற்கனவே இரு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.   பிரதமர் மோடி தலைமையில்  நடந்த  அமைச்சரவை கூட்டத்தில்,  கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து ஜனவரி 1ந்தேதி  முதல் புதிய நீடிப்பு அமலுக்கு வந்தது.

இதுதொடர்பாக, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அரிசி, கோதுமை தானியங்கள் தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். ஜனவரி 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என கூறியதுடன், இதன்மூலம் சுமார் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று  தெரிவித்தார்.