சென்னை: கொரோனா நோய் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள் வழங்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகத்தில் வெகுவாக குறைந்தாலும், கோவை,ஈரோடு, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களில் கட்டுக்குள் வராமல் இருந்து வருகிறார். இதனால், அங்கு தளர்வுகள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினை போக்கும் விதமாகவும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரை நாள்தோறும் ஒரு இலட்சம் உணவு பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி, ஆணையிடப்பட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன.

இதற்கான போதிய நிதி வசதி இல்லாத திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட உணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரை தொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும் திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும் நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.