சென்னை:

கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஏழை எளிய மக்கள் பசியாற்றும் வகையில் குறைந்த விலையில், காலை, மதியம், மாலை உணவுகள் விற்பனை செய்யப்படும் வகையில் அம்மா உணவகம் தொடங்கப்படடது. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது. இதைபோல் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது.  இதன்மூலம்  ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனா்.

சென்னை மாநகரில் மட்மும் 407 அம்மா உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 அம்மா  உணவகங்களும் செயல்பட்டு வருகிறது.

தற்போது ஊரடங்கு காரணமாக, இந்த உணவகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதே வேளையில் வேலையில்லாமல் ஏராளமானோர் தவித்து வரும் நிலையில், அவர்கள் குறைந்த விலையில்கூட பணம் கொடுத்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு  எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் உத்தரவின்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதற்கான முழுச் செலவையும் அந்தந்த மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டு அதற்கான முன்பணத்தையும் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் 407 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்

பொதுமக்களின் இடம், பெயர், தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டு இலவச உணவு அளிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலவச உணவு தர பல நன்கொடையாளர்களர் நிதி அளித்துள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சி இந்த ஏற்பாடை செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.