சென்னை 

இன்னும் 3 மாதத்துக்குள் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 6.18 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 3.3.2022 அன்று  2021-22ம் கல்வி ஆண்டிற்கான சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழிற்பயிற்சி பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் தகுதியான சைக்கிள்கள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விரைவில் கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு 6,18,101 சைக்கிள்கள் கொள்முதல் செய்து 3 மாத காலத்திற்குள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும்.”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.