சென்னை: சென்னையில் டிசம்பர்  மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் முதன்முறையாக  ஃபார்முலா 4  கார் ரேஸ் நடைபெற உள்ளது.  டிசம்பர் 9 மற்றும் 10 தேதி  இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் நடைபெறவுள்ளன. இதை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து நடத்துதுகிறது.  “ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4”  என்ற பெயரிலான இந்த கார் பந்தயம் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு  ரூபாய் 8 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

அதைத்தொடர்ந்து, பந்தயம் நடைபெறும்    சென்னை நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை, உள்ளிட்ட பகுதிகளில் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. ந்தயத்திற்கு ஏற்றார் போல சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இரவு, பகல் பாராமல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல், அண்ணாசாலை பகுதி மற்றும் நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள், தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, பந்தய தூரமான 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதனால் சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை, தீவுத்திடல் சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, ‘’சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4 போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை – காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டோம். மேலும், இந்தப் போட்டிக்கான டிக்கெட்-ஐ இன்று அறிமுகம் செய்தோம். இச்சிறப்புக்குரிய போட்டிக்கான பாதுகாப்பு – அடிப்படை வசதிகள் – மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெறும் இந்த சிறப்புக்குரிய போட்டியின் வெற்றியின் மூலம் புது வரலாறு படைத்திடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.