மதுரை: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 4 கார்களில் வந்த மர்ம நபர்கள், சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது  அவரது  கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அவருடன் இருந்த அதிமுக கவுன்சிலர் கடத்தல்தப்பட்டு உள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் கரூர் அமைச்சரின் ஆட்கள் என கூறப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது வேடச்சந்தூர் அருகே நாகம்பட்டி பாலம் பகுதியில் 4 கார்களில் வந்த மர்ம நபர்கள், விஜயபாஸ்கர் காரை மறித்து தாக்குதல் நடத்த தொடங்கினர். மேலும் அவர் கார்மீது ஆசிட் வீச்சும் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் எம்ஆர்.விஜயபாஸ்கருடன் வந்த 2 பேர் காயமடைந்ததாகவும், மற்றொருவரான அதிமுக கவுன்சிலைரை  கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.  ‘இதையடுத்து அங்கு அதிமுகவினர் திரண்டனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த வந்த காவல்துறையினர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு பாதுகாப்பு கொடுத்து அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பான விசாரணையில், எம்ஆர்விஜயபாஸ்கர் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் என்றும்,  கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கான தேர்தல், கரூர் ஊராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்தது. மொத்தமுள்ள 12 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக மற்றும் அதிமுகவினருக்கு தலா 6 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிடும் திருவிக என்பவர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு வந்துள்ளார். இவரை குறிவைத்தே விஜயபாஸ்கர் கார் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திண்டுக்கல் – கரூர் சாலையின் சிசிடிவி பதிவுகள் மூலம் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.