சென்னை: இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பாக தொடரப்பட்ட ஜாமின்  வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு  ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ளஓட்டு போடச்சென்ற திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து தாக்கியதுடன், அவரை அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நள்ளிரவு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மற்றொருவழக்கிலும் அவரை காவல்துறையினர் கைது செய்வதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், அவரது முதல்வழக்கு மீதான ஜாமின் மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், 2வது வழக்கில் அவரை மார்ச் 9ந்தேதி வரை காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,ஜெயக்குமார் அவர்கள் தாக்கல் செய்த மனுவின் நகலை காவல்துறை தரப்பிற்கு வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.