திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி  இன்று அதிகாலை காலமானார்.  இதையடுத்து அவரது உடலுக்கு அகில  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை  காலமானார். இவர் ஏற்கனவே  தொண்டை புற்றுநோய் பாதிப்பு காரணமாக   பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது நாள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுவதால், அதில் கலந்துகொள்ள  வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் தற்போதைய தலைவர்கள் கார்கே உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு  இதுகுறித்து தகவல்  கிடைத்தது.

உம்மன்சாண்டி  உடல் கர்நாடக அமைச்சர் ஜான் வீட்டில் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதேபோல், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்

மறைந்த உம்மன்சாண்டி  உடல்  பெங்களூருவில் இருந்து அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திற்கு கொண்டு கொண்டு  செல்லப்பட்டு வியாழக்கிழமை இறுதிச் சடங்கு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உம்மன்சாண்டி மறைவையொட்டி, இன்று கேரள மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

உம்மன்சாண்டி கடந்த 2004-ம் ஆண்டு ஏ.கே.ஆண்டனி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கேரள முதல்வராக உம்மன் சாண்டி பதவியேற்றார். கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும் , 2011-ல் மீண்டும் முதல்வராகவும் பொறுப்பு வகித்தார். இருமுறை கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பள்ளி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ள டிவிட்டில்,   ” பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, கேரளாவின் முன்னேற்றத் திற்காக உழைத்த ஒரு பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை நாம் இழந்துவிட்டோம். குறிப்பாக நாங்கள் இருவரும், மாநில முதலமைச்சர்களாக இருந்தபோதும், பின்னர் நான் டெல்லிக்கு சென்றபோதும் அவருடன் நான் நடத்திய பல்வேறு தொடர்புகளை நினைவு கூர்ந்தேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், ஆதரவாளர்களுடனும் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.