டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல்  மேலும் 14நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது,  ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற முறைகேடாக அனுமதி வழங்கியதாக  சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில்,  சட்டவிரோதப் பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சிதம்பரம் மீது குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்துள்ளது.

ஏற்கனவே சிபிஐ கைது செய்யப்பட்டதில், உச்சநீதி மன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ள நிலையில், அமலாக்கத்துறை கைது வழக்கில் அவரது ஜாமின் மனு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையைத் தொடர்ந்து, சிதம்பரத்தின்  நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.