தமிழக சட்டப்பேரவையில்பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று தமிழக நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது,
கடந்த ஒன்றரை வருடமாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் திடீரென பள்ளிக்கு வந்தால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, கற்றுக்கொள்வதிலும் சிரமம் இருக்கும்.
தற்போது குழந்தை திருமணங்களும், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக இந்த நிதியாண்டில் முதல் நிதி ஒதுக்கீடாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படும்.
அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்
நந்தனத்தில் உள்ள நிதித் துறைக்கு சொந்தமான கட்டிடம் முன்னாள் நிதியமைச்சரும், திமுக வழிகாட்டியுமான பேராசிரியர் க.அன்பழகனின் பெயரால் அழைக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பலமுறை கல்வி அமைச்சராகவும், 2006ஆம் ஆண்டு கருணாநிதி அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.