ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகள் தோல்வியை சந்தித்துள்ளார்.

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975 பதவிகளை நிரப்புவதற்காக இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகளும், டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகின. இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்தின் 2வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகள் இராவியத்துல் அதவியா தோல்வியை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் இராவியத்துல் அதவியாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி 1,343 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இருமுறை எம்.பியாக தேர்வான அன்வர் ராஜா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தனது மகளை வெற்றி பெற செய்ய இயலாதது, அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.