நெட்டிசன்:

பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம்.

அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு கெட்ட பெயர். பெங்களூரு மட்டுமல்ல…

தலைநகர் டெல்லியில் பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுவதில் டெல்லிக்கு இரண்டாவது இடம்.

பொருளதாரத் தலைநகர் மும்பையிலும் பெண்களின் நிலை மோசம்தான்.

ஆனால், சென்னை அப்படி அல்ல என்பதை நிரூபித்துள்ளது மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம்

அண்மையில் இந்திய தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆவணத்தின்படி, ஒரு தகவல் வெளியாகி யிருந்தது.

அதன்படி, இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் முதலிடம் பிடித்திருந்தது.

இரண்டாவது இடத்தை சென்னை பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் திருச்சிக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது.

பெண்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் டாப் -10 நகரங்களின் பட்டியலில், 3 தமிழக நகரங்கள் இடம்பெற்றிருந்தன.

பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில், முதல் பத்து இடத்தில் ஒரு தமிழக நகரம் கூட இடம் பெறவில்லை. ஆக, பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

இது ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எதிரொலித்தது.

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். பகலில்  ஆயிரக்கணக்கான  பேர் பங்கேற்ற கூட்டம், இரவில் இன்னும் அதிகமானது.  சுமார்  25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளைஞிகள் மெரினாவில் திரண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிக நேர்த்தியாக ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடக்க இடம் கொடுக்கவில்லை.

பெண்களை , குழந்தைகளை கண்ணியத்துடன் அரவணைத்துப் பாதுகாத்தனர் இளைஞர்கள்.

ஆனால், போராட்டத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு விளக்குகளை அணைத்து இருளை ஏற்படுத்தியது.

ஜாமர்கள் வைத்து சிக்னல்கள் கிடைக்காமல் தடை செய்தது. இதனால் கூட்டம் கலைந்து விடும். பெண்கள் மிரண்டு போவார்கள் என்பது அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.

சொல்லப்போனால் ஜல்லிக்கட்டு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரே ஒரு பெண்தான் என்பதையும் இங்கே அரசு மறந்து விட்டது போலும்.

விளக்கை அணைத்ததும் அனைவர் கையில் இருந்தும் செல்போன்களில் இருந்து வெளிச்சம் பாய்ந்தது. பெங்களூரு போல இருள் கிடைத்ததும் பெண்கள் மீது பாயவில்லை.

மாறாக கைகள் மேலே உயர்ந்து பெண்களுக்கு வெளிச்சம் அளித்தது. அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தது.

சட்டத்தைப் பாதுகாக்காக வேணடிய அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்புக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் மெரினாவின் விளக்குகளை அணைத்தனர்.

கூட்டத்தினுள் ஏராளமான பெண்களும் இருந்தனர். குழந்தைகளும் இருந்தனர். மெரினாவில் என்ன நடந்தது.? ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை உணர முடிந்தது.

மூவாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட நாகரிகத்தின் வழி வந்த ச மூகம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக இளைஞர்கள்.

100 ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது சென்னை மெரினா!