தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சபரிமலை பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவ்வப்போது  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த 30ந்தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.  மெயின் அருவியை தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து கடந்த 1-ம் தேதி சீரானது. தண்ணீர் வரத்து குறைந்ததால் 1ந்தேதி முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக  குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.