சென்னை: வெள்ள நிவாரணத்தை, பொதுமக்களின் வங்கி கணக்குகளில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், ரொக்கமாக வழங்கலாம் என சென்னை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.6000 வழங்குவதாக அறிவித்து உள்ளது. இது  ரேசன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், பயனர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில்,  புயல் நிவாரண நிதியை ரொக்கமாக வழங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு தொடரப்பட்டது.  முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது  மனுவில், நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்கினால் அதிக முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும், வங்கிக் கணக்கில் செலுத்தினால் பிரச்னை இருக்காது என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வெள்ள நிவாரணம் என்பது உடனடித் தேவை. அதை காலதாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், நிவாரணம் தகுதியானோருக்கு செல்வதை உறுதி செய்யவும், நிவாரணம் வழங்கியது குறித்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்பிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.