நடுவரப்பட்டு

காஞ்சி மாவட்டம் நடுவரப்பட்டு ஏரியில் இன்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் கனமழை பெய்ததால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்ததால் நடுவரப்பட்டு பகுதியிலுள்ள ஏரி நிரம்பி வழிந்தது. இந்த ஏரி அந்த பகுதிக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கிவருகிறது, இந்த ஏரியின் மூலம் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென இந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியபடி வெளியேறினர்.

ஏரியை மர்மநபர்கள் யாரும் ஏரியை உடைத்தனரா..? அல்லது ஏரிக்கரை தானாக உடைந்ததா..? என்பவை குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள  பொதுமக்கள் ஏரி உடைப்பால் கடும் அவதி அடைந்துள்ளனர். விவசாயிகள் தக்கள் விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.